திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் வீட்டின் தோட்டத்தில் இருந்த ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜிதை மீட்கும் பணி, 47 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் ஆழ்துளைக் கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழித் தோண்டப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டது.
ஆழ்துளைக் கிணறுக்கு அருகில் 2 மீட்டர் தொலைவில் 1 மீட்டர் அகலம், 110 அடி ஆழத்தில் இந்தக் குழி தோண்டப்பட்டு வருகிறது. ரிக் இயந்திரம் மூலம் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் 100 அடி குழியை தோண்ட முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோண்டும் இடத்தில் பாறைகள் இருப்பதால் குழித் தோண்டும் பணி தாமதமானது.
இந்நிலையில், ராமநாதபுரத்திலிருந்து அதிக திறன் கொண்ட மற்றொரு துளையிடும் இயந்திரத்தை நடுகாட்டுப்பட்டிக்கு கொண்டுவர மீட்புப் படையினர் திட்டமிட்டனர்.
இந்நிலையில் ராமநாதபுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளஇரண்டாவது இயந்திரத்தின் மூலம் துளையிடும் பணி தீவிரப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டாவது இயந்திரம் முதல் இயந்திரத்தைவிட மூன்று மடங்கு அதிக திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.