கடந்த மார்ச்சில் இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு, மக்கள் வங்கிகளில் பெற்ற கடன்களின் மாத தவணையான இ.எம்.ஐ.யை திருப்பி செலுத்த 6 மாதங்கள் வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அதாவது ஆகஸ்டு 31 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த சலுகையை பயன்படுத்தியவர்களுக்கு, தவணையை செலுத்தாத 6 மாதங்களுக்கும் வட்டிக்கு வட்டி விதிக்கப்படும் என வங்கிகள் தெரிவித்தன. இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ரிசர்வ் வங்கியின் உத்தரவை மீறி வங்கிகள் கடன் பெற்றவர்களிடம் இருந்து தொடர்ந்து வட்டி வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசை சுப்ரீம் கோர்டு கடுமையாக சாடியிருந்தது. கடந்த 2 ஆம் தேதி நடந்த விசாரணையின்போது, ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு வட்டி மீது வட்டி விதிக்கப்பட மாட்டாது, ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டி மீதான வட்டி தள்ளுபடி செய்யப்படுவதாக கூறி மத்திய அரசு சுப்ரீம்கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
இதனால் வங்கிகளில் தவணை கட்டதவறியவர்களுக்கும், சிறு தொழில் புரிபவருக்கும் பலன் கிடைக்கும். சிறு, குறு மற்றும்நடுத்தர நிறுவனங்கள் கல்வி, வீட்டு வசதி, நுகர்வோர் பொருட்கள், வாகன கடன், கிரெடிட் கார்டு ஆகியவற்றின் நிலுவை தொகைகளுக்கான வட்டி தள்ளுபடி இதில் பொருந்தும். கொரோனா ஊரடங்கு காலத்தில் வட்டியை தள்ளுபடி செய்யும் சுமையை அரசாங்கம் சுமப்பதே இதற்கு ஒரே தீர்வு என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் சமர்பித்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வட்டிக்கு வட்டி வசூல் இல்லை என்ற அரசின் அறிவிப்பில் சந்தேகம் உள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அதேசமயம் உச்ச நீதிமன்றம் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பிரமாண பத்திரத்தில் பதில் அளிக்கப்படவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அத்துடன், நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி விரிவான பதில் மனுவை தாக்கல் செய்வதற்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், விசாரணையை 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.