வங்கிக்கணக்கு இல்லாத மக்கள் அதிகம் வசிக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
வங்கிக் கணக்குகள் தொடர்பான உலகளாவிய ஒப்பீடு வெளியாகி உள்ளது. அதில், இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்தபோதிலும், உலக அளவில் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் கொண்ட நாடுகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2014-ஆம் ஆண்டு வங்கி கணக்கு வைத்திருப்போர் எண்ணிக்கை 53 சதவீதமாக இருந்தது. அது 2017ல் 80 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால், 191 மில்லியன் மக்களுக்கு (19.1 கோடி) வங்கி கணக்கு இல்லை. இது, வங்கிக்கணக்கு இல்லாத மக்கள் அதிகம் உள்ள நாடுகளில் இரண்டாவது இடமாகும்.வங்கிக்கணக்கு இல்லாத மக்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் முதலிடத்தில் சீனா உள்ளது. அங்கு 224 மில்லியன் (22.4 கோடி) மக்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை. பாகிஸ்தான் 99 மில்லியன் மக்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் பா.ஜ.க. தலைமையிலான அரசு பொறுப்பேற்றபிறகு, முன்வைப்புத் தொகை எதுவும் இன்றி ஏழைகள் வங்கிக் கணக்கை தொடங்கலாம் என பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா என்ற திட்டம் கொண்டு வரப்பட்டு, நாடு முழுவதும் ஏழைகள் வங்கி கணக்கு தொடங்க வழி வகை செய்யப்பட்டது. இதில் பல லட்சம் மக்கள் வங்கி கணக்கு தொடங்கினர்.