காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் காண அவனியாபுரத்திற்கு வருகை தந்தார். இதனையடுத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த வி.ஜ.பி.மேடையில் ராகுல் காந்தி அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அங்குள்ள மக்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“தமிழர்களின் பாரம்பரியத்தை நேரில் கண்டு ரசிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஜல்லிக்கட்டு விழா மிகவும் நேர்த்தியாகவும், பாதுகாப்பாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாடுகளுக்கும், மாடுகளை அடக்கும் இளைஞர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழக மக்களின் உணர்வு, கலாச்சாரம், வரலாறு ஆகியவை குறித்து நேரில்கண்டு தெரிந்து கொள்வதற்காக நான் வந்துள்ளேன். தமிழ் மொழியும் தமிழக மக்களின் கலாச்சாரமும் இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.
தமிழக மக்கள் என் மீது மிகுந்த அன்பு செலுத்தியுள்ளனர். தமிழகமக்களோடு நின்று தமிழ் பண்பாட்டையும், வரலாற்றையும் காக்கும் கடமை எனக்கு உள்ளது. தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.”
இவ்வாறு அவர் பேசினார்.
ஜல்லிக்கட்டை கண்டு ரசித்த ராகுல் காந்தி சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு புறப்பட்டுச்சென்றார்.