உலக பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ திருவிழா வரும் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதியில் இருந்து 27 ஆம் தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்தது. அதில் வாகன சேவை நடக்கவில்லை. கோவில் உள்ளேயே தினமும் இருவேளை அந்தந்த நாளுக்குரிய வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் இணைந்தும் சிறப்பு அலங்காரத்தில் கல்யாண உற்சவமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
அதைத் தொடர்ந்து வருகிற 16 ஆம் தேதியில் இருந்து 24 ஆம் தேதி வரை 9 நாட்கள் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்க உள்ளது. இது, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். இந்தப் பிரம்மோற்சவ விழாவில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் வாகன சேவை நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.
இந்தவைபவத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு வழக்கம்போல் அனுமதி அளிக்க தேவஸ்தான நிர்வாக அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வாகன சேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய ரூ.300 டிக்கெட்பக்தர்கள், ஸ்ரீவாணி டிரஸ்ட்டுக்கு காணிக்கை வழங்கிய பக்தர்கள், சிபாரிசு கடிதம்மூலம் வழங்கப்படும் வி.ஐ.பி. தரிசன டிக்கெட் பக்தர்கள், உள்ளூர் பக்தர்கள் எனத் தினமும் 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் பக்தர்கள் வரை நான்கு மாடவீதிகளில் அமர வைக்கப்பட உள்ளனர்.
அடையாள அட்டைவைத்திருக்கும் உள்ளூர் பக்தர்கள் மட்டும் வாகனச் சேவையை பார்க்க நான்கு மாடவீதிகளில் அனுமதிக்கப்படுவர். கொரோனா பரவலை தடுப்பதற்காகவும், பக்தர்கள் இடையூறு இல்லாமல் அமருவதற்காகவும் நான்கு மாடவீதிகளில் உள்ள கேலரிகளில் 6 அடி தூரத்துக்கு வெள்ளை நிறத்தில் கட்டங்கள் போடப்பட்டுள்ளது. நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் கொடியேற்றம், கொடியிறக்கம், தேரோட்டம் ஆகியவை நடக்காது. என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், ஆன்-லைனில் பதிவு செய்யும் அனுமதி பெறும் பக்தர்கள் மட்டும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)