கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கான சிகிச்சையில் மால்னுபிராவிர் மாத்திரையைப் பயன்படுத்தக் கூடாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) தேசிய செயற்குழு முடிவெடுத்துள்ளது.
மால்னுபிராவிர் மாத்திரையின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ) கடந்த மாதம் ஒப்புதல் அளித்திருந்தது.
கொரோனா தொற்று பாதிப்பின் தீவிரம் குறைவாக உள்ளவர்கள் அந்த மாத்திரையை மருத்துவர்களின் பரிந்துரையுடன் எடுத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மால்னுபிராவிர் மாத்திரை பாதுகாப்பு சார்ந்த குறைபாடுகளைக் கொண்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இயக்குநர் பல்ராம் பார்கவா அண்மையில் தெரிவித்திருந்தார்.
உலக சுகாதார அமைப்பும், பிரிட்டனும் மால்னுபிராவிர் மாத்திரையை கொரோனா சிகிச்சையில் இணைத்துக் கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
அதன் காரணமாக, கொரோனா சிகிச்சைக்கான தேசிய வழிகாட்டு விதிமுறைகளில் மால்னுபிராவிர் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், ஐசிஎம்ஆர் அதிகாரி செய்தியாளர்களிடம் (ஜன-11) நேற்று கூறுகையில், “இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கரோனாவுக்கான தேசிய செயற்குழு கூட்டம்
(ஜன-10) திங்கள்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் மால்னுபிராவிர் மாத்திரை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
கொரோனா தொற்று பாதிப்புக்கான சிகிச்சையில் அந்த மாத்திரை பெரிய அளவிலான பலனை அளிக்கவில்லை. மேலும், அந்த மாத்திரையில் சில பாதுகாப்பு குறைபாடுகளும் உள்ளன. எனவே,மால்னுபிராவிர் மாத்திரையை தேசிய சிகிச்சைக்கான விதிமுறைகளில் இணைக்க அக்குழு ஆதரவு தெரிவிக்கவில்லை” என்றார். மால்னுபிராவிர் மாத்திரை முற்றிலும் பாதுகாப்பானது என அதன் தயாரிப்பு நிறுவனம் அண்மையில் தெரிவித்திருந்தது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த மாத்திரையை எடுத்துக் கொண்டால், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான அவசியமும் உயிரிழப்பும் பெருமளவில் குறைவது 3-ஆம் கட்ட பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.