விருதுநகர், மதுரை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வௌியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வளிமண்டல் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி, நீலகிரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் விருதுநகர், மதுரை, கிருஷ்ணகிரி, சிவகங்கை, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சேலம், தர்மபுரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 23, 24 மற்றும் 25ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டை மற்றும் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது, என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
* ஆகஸ்டு 21ம்(இன்று) தேதி, வடக்கு ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
* ஆகஸ்டு 21 முதல் 25ம் தேதி வரை, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில், பலத்த காற்று 50-60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
* ஆகஸ்டு 22 மற்றும் 23ம் தேதிகளில், மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
* ஆகஸ்டு 21ம் தேதி முதல், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் கடலோர பகுதிகளில் பலத்த காற்று 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
எனவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 22.08.2020 இரவு 11.30 மணி வரை உயர் கடல் அலை 2.5 முதல் 2.8 மீட்டர் வரை எழும்பக்கூடும், என குறிப்பிடப்பட்டுள்ளது.